'காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, கர்நாடகா மற்றும் தமிழகத்தில், போராட்டங்கள், கடையடைப்பு கள் நடத்தக் கூடாது; அமைதி மற்றும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று தீர்ப்பு அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தமிழகத்தில், இன்று முழு கடையடைப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட தைத் தொடர்ந்து, கர்நாடகாவில் பெரும் அளவில் போராட்டங்களும், கலவரங்களும் நடந்தன. தமிழகத்திலும் போராட்டங்களும், அசம்பாவித சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், இரு மாநிலங்களிலும், 'பந்த்' உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், இன்று, முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே, 'இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள வன்முறை, போராட்டங்களால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும்படி, இரு மாநிலங்களுக் கும் உத்தரவிட வேண்டும்' என, சமூக ஆர்வல ரான சிவக்குமார், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, தமிழகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், சுப்பிரமணியம் பிரசாத்திடம், நீதிபதிகள் கூறியதாவது:
கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும், சட்டத்துக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டும். அந்த தீர்ப்பை எதிர்த்து, போராட்டங்களோ, 'பந்த்'தோ நடக்கக் கூடாது. அமைதியையும், சட்டம் - ஒழுங்கையும் பராமரிக்க வேண்டும்; இதை உங்கள் மாநிலத் துக்கு தெரிவியுங்கள்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இதன்பின், தங்கள் இடைக்கால தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
பொதுமக்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. போராட்டங்கள் நடப்பதை, பொது சொத்து சேதப்படுத்தப்படுவதை தடுக்க வேண்டியது, மாநிலங்களின் பொறுப்பு. அமைதியும், சட்டம் - ஒழுங்கும் முறையாக இருப்பதை இரு மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். போராட்டங்கள் தொடர்பாக, 2009ல், சுப்ரீம் கோர்ட், தன் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. போலீசாரின் முன் அனுமதியுடன்,அமைதியான முறையில், பேரணி அல்லது போராட்டத்தை நடத்தலாம். போராட்டத்தில் ஈடுபடுவோர், எவ்வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட்டின் அந்தத் தீர்ப்பை, தற்போது இரு மாநிலங்களுக் கும் நினைவு கூருகிறோம். கோர்ட் உத்தரவை மீறக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வழக்கின் விசாரணை, வரும், 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பை அடுத்து, தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள, முழு கடையடைப்பு போராட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜ., ஆதரவுதமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழர்களின் உரிமையை, எந்த விதத்திலும் விட்டுத் தரக்கூடாது என்பதால், தமிழக பா.ஜ., முழு ஆதரவை தெரிவிக்கிறது. அதேநேரத்தில், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங் களுக்கு அருகில் போராட்டம் போன்ற வன்முறையை துாண்டும் அறிவிப்புகளை, சிலர் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்களுக்கு பாதுகாப்பு சித்தராமையா உறுதி
பெங்களூரு: 'கர்நாடகத்தில் வாழும் தமிழர் களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கடிதம் எழுதி யுள்ளார்.காவிரி பிரச்னையால், கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவரு மான சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.தமிழகத்தில் கன்னடர்கள் மீது நடந்த தாக்குதல், இங்கு வன்முறை வெடிக்க காரண மானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப் பதற்குள், நிலைமை மோசமாகி விட்டது. ஆனாலும், தற்போது நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. மீண்டும் வன்முறை வெடிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில அமைப்புகள், 'பந்த்'துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அப்போது, கன்னடம் பேசும் மக்களின் உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்; காவிரி நதிநீர் விஷயம் தொடர்பாக, அக்கறையுடன் நடந்து கொள்ளும்படி ஊடகத்தினரிடம் தெரிவித்துள் ளோம். அதேபோல், தாங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டல்கள் உண்டு:
தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டம், தமிழக அரசின் நடவடிக்கையை, சட்ட ரீதியாக வலுவிழக்கச் செய்யும். ஓட்டல்களை மூடி னால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; எனவே, போராட்டத்தில் தமிழக ஓட்டல்கள் சங்கம் பங்கேற்காது; ஓட்டல்கள், இன்று திறந்திருக்கும்.
-வெங்கடசுப்புதமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர்
சினிமா காட்சிகள் மாலை வரை ரத்து:
தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும், இன்று காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மூடப்பட்டிருக்கும். மாலை, 6:00 மணிக்கு மேல் வழக்கமான காட்சிகள் இடம்பெறும்.
-அபிராமி ராமநாதன்தியேட்டர்கள் சங்க தலைவர்
நகை கடைகள் இன்று அடைப்பு
தமிழகத்தில், 35 ஆயிரம் தங்க நகை கடைகள் உள்ளன. கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இன்று, 'பந்த்' நடக்கிறது. அதற்கு ஆதரவாக, அனைத்து நகை கடைகளும் மூடப்படும்.ஜெயந்திலால் சலானி சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர்.
No comments:
Post a Comment